Sunday, 27 September 2015

மீண்டும் விதைக்கலாம் தமிழ்.

" வீரம் சேர்ப்பது தாய்ப்பால் " என்றான் பாரதி ஏனோ நான் மழலைப் பருவத்தில் எனது தாயார் புகட்டிய தாய்ப்பால் வீணாகிப் போனதாகவே கருதிகிறேன். காரணம் நான் எல்லா விசயங்களிலும் வீரனாக இல்லை. மொழி விசயத்தில் நான் ஒரு கோழையே. இதன் காரணத்தை ஆராய்ந்த பொழுது எனக்கு சித்தர்கள் கூறிச் சென்ற பழமொழி நினைவிற்கு வருகிறது. " காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் " என மண்டலம் கொண்டால் கோலூன்றி நடக்கும் கிழவன் கூட கோல் வீசி நடப்பான். ஆனால் இன்று நானும் எனது சமுதாய மக்களும் ஒரு மண்டலம் அல்ல பல மண்டலங்களாக நாகரிகம் என்ற பெயரில் ஆங்கிலம் என்னும் போதையால் தள்ளப்பட்டுள்ளோம். முழுமையாக 20 நிமிடங்கள் கூட ஆங்கிலத்தில் பேசத் தெரியாத நான் 300 ஆண்டிற்கு முன் வந்ததை முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு முன் தோன்றிய தமிழை வினைச் சொல்லிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இந்த நிலை நிரந்தரமாக நீடிக்க விரும்பவில்லை. வீரம் நிறைந்த என் தாய் தமிழ் நாட்டில் சிறு வயதில் எனக்கு பல நேரங்களில் தமிழ் கதைகளைக் கூறி சோறூற்றினாள். அப்படி கூறியதை நான் நினைவு படுத்தி பார்க்கையில் கூட அதில் ஆங்கில மொழி கலந்ததாகத் தெரியவில்லை. நம்மை எதிர்த்துப் போராட வழியில்லாமல் நம் நாட்டை விட்டு ஓடிய வெள்ளையர்கள் கோழைகள் ஆனால் நாம் அந்த கோழைகளின் தாய் மொழியைப் பின்பற்றி வருகிறோம். " உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே ".என்று ஹிட்லர் கூறினார். ஆனால் இன்று தூய மொழியில் பேசினால் சமுதாயம் என்னை ஏளனம் செய்கிறது. அதற்காக நான் ஆங்கிலம் வேண்டாமென்று கூறவில்லை மாறாக தமிழை மறக்க வேண்டாம் என நினைக்கிறேன். கனிம வளங்கள் நிறைந்த நம் நாட்டில் இப்பொழுது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைப் போல தமிழ் மொழியும் வற்றிக்கொண்டு உள்ளது இதை மீண்டும் விதைக்கலாமே ? அப்படியானால் இதை யார் செய்வது. நான் தானே செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்டுவது யார்? என்னை வளர்த்த பெற்றோர்களா ? (அ)ஆசிரியர்களா இல்லை நாளைய படைப்பாளியாகத் தன்னை செதுக்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களா, எழுத்தாளர்களா,இலக்கியவாதிகளா முடிவு உங்களிடமா இல்லை முயற்சி என்னுடையதா ?.எனக்கும் நிலம் உண்டு. நிலத்தில் விளைச்சல் சரியாக இல்லையென்றால் பல விதமான உரங்களைப் பயன்படுத்தி அவற்றை சரி செய்ய முயற்சி செய்வேன் அதைப் போல எனது தமிழும் சில ஆண்டுகளாக நோயுற்று மெலிந்து கொண்டு வருகிறது. தேவை மருந்து இல்லை. மருத்துவர் தான். ஏராளமான மருத்துவர்களை உருவாக்கி பெருமை கொள்ளும் நாம் தமிழ் மொழி மருத்துவர்களை முழுமையாக இந்த சமூகத்திற்கு தராமல் பாராமுகமாக இருப்பது ஏன்? மருத்துவனுக்கு மனித நேயம் தேவை. நமது தாய் தமிழ் மனித நேயம் மிக்கவள் .நம்மையும் நமது முன்னோர்களையும் இணைத்தது தமிழ் தான். நாம் அனைவருமே மனித நேயம் மிக்கவர்கள் அதனால்தான் நம்மையும் அறியாமல்  சிறிது சிறிதாக நாம் ஆங்கில மருந்துகள் தவிர்த்து தமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறோம்.சமீப காலமாக நமது உணவிலும் மாற்றம் விரும்பி பழைய உணவைத் தேடி உண்கிறோம். அவற்றை விளையச்செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். வரலாற்றில் பல சரித்திரங்கள் நமது மொழிக்கு உண்டு. அதைப் போல மீண்டும் தமிழை விதைப்போம். இதன் பெருமையை உலகுக்கு உறக்கச் சொல்வோம்.  கண்ணதாசன் அழகாக ஒரு வரியைக் கூறுவார். "எனக்கு மதம் இந்து மதம் ஆனால் எனக்கு இன்னொரு மதமும் உண்டு அது தாமதம் " என நகைச்சுவையாக தமது குறையைக் கூறி அடுத்த மேடையில் சரி செய்து விடுகிறேன் என்று கூறுவார் அதைப் போல நாமும் தமிழுக்குத் திரும்புவோம் ஏனெனில் எனக்கும் மனித நேயம் உண்டு.
"வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன் ".

No comments:

Post a Comment